தொடர் மழையினால் திருச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை தயாராக இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் சம்பா நாற்று திருச்சி மாவட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, வயலூர், இனாம் புலியூர், மணப்பாறை, வையம்பட்டி, முசிறி, லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1.25 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டது. பயிரிடப்பட்ட அனைத்தும் பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்து, அறுவடை செய்த நெல்லை பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடுவார்கள்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஜனவரி மாதம் 15 நாட்களுக்கு மேலாக தொடர் மழையினால் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்ய முடியாமல் நீரில் மூழ்கியது. மேலும் மூழ்கிய பயிர்கள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் கடன் பெற்று மேலும் ஐந்தாயிரம் கூடுதலாக, 30 ஆயிரத்திற்கும் மேலாக செலவு செய்தும் தற்போது விளைவித்த அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி முளைத்ததால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வட்டிக்கு கடன் வாங்கியும் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியும் பயிரிட்ட நெற் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பயிரிட்ட சம்பா பயிர்களை அறுவடை செய்து வீட்டின் அன்றாட உணவின் தேவைக்காகவும், மீதமுள்ள நெல்களை விற்று குடும்பத்தின் செலவிற்காகவும், திருமண நிகழ்ச்சியில் செய்வதற்கு எண்ணி இருந்தவர்கள் செய்வது அறியாமல் வாழ்வாதாரம் இழந்து வேதனையுடன் விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே அரசு பயிர் பாதிப்பை கணக்கிட்டு விரைந்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/38LPY07
via IFTTT
0 Comments