அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக 5 லட்சத்து 100 ரூபாயை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்கொடையாக அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயிலுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படவுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் ராமர் கோவிலை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது கோயில் கட்டுமானத்திற்குக் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக அளித்தார். மேலும் கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பீகார் தலைநகர் பாட்னாவில் நிதி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, "பீகாரில் உள்ள ஒவ்வொரு இந்து குடும்பமும் ராமர் கோயிலுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்கும் என்று நம்புகிறேன். மாற்று மதத்தினரும் ராமர் கோயிலுக்கு தாராளமாக நிதி அளிக்கலாம். ஆனால் ஒரு மசூதி கட்டப்படுகிறது என்றால் அங்கிருக்கும் இஸ்லாமியர்களே அதிக பங்களிப்பை அளிப்பார்கள். அதேபோல ராமர் கோயிலுக்கு இந்துக்கள் அதிகளவில் பங்களிப்பைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2KeUD10
via IFTTT
0 Comments