தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது; அப்படி செய்தால் அது மோசமான செயல் என மதுரை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி கூறியுள்ளார்.
நான் ஒரு விழாநாளில் இங்கு வந்திருக்கிறேன். ஆகவே பொங்கல் வாழ்த்துடன் தொடங்குகிறேன். நான் ஜல்லிக்கட்டை பார்த்தேன். நல்ல நேரமாக அது அமைந்தது. தமிழ் மக்கள் ஏன் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கிறார்கள் என அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகளை துன்புறுத்தும் என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று நேரடியாக ஜல்லிக்கட்டை பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறேன். அதற்கான வாய்ப்பே இல்லை.
நான் இங்கு வந்ததற்கான மற்றொரு காரணம் அரசு, நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் தெரிகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை, மொழியை நசுக்குவதன் மூலம் தமிழ் உணர்வை நசுக்கிவிடலாம் என எண்ணுகிறது. அவர்களுக்கு தர என்னிடம் செய்தி உள்ளது. ஒன்று தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது. இரண்டாவது தமிழுணர்வை நசுக்குவது நமது நாட்டிற்கு செய்யும் மிக மோசமான செயல். பல கலாச்சாரங்கள் நமது நாட்டில் உள்ளன. அவை தான் நமது தேசத்தின் உயிர் போன்றவை.
ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம், ஒரு குறிப்பிட்ட மொழி என்பது இல்லை. பல மொழிகள் கலாச்சாரங்கள் நமது நாட்டில் உள்ளன. தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன். கடந்த காலம் குறித்த பலவற்றை அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். அதோடு எதை நோக்கி நாடு நகர வேண்டுமென்ற திசையையும் காட்டியுள்ளனர். ஆகவே அவர்களுக்கும், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.
அரசு விவசாயிகளை புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் சதி செய்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அழிக்க சதி செய்கிறது. அவர்களின் 2, 3 நண்பர்களின் நலனுக்காக அழிக்க சதி செய்கிறது. விவசாயிகளைச் சார்ந்திருக்கும் விசயத்தை, அரசின் ஒரு சில நண்பர்களைச் சார்ந்திருக்குமாறு மாற்ற நினைக்கிறது. விவசாயிகளின் நிலத்தை, உற்பத்தியை எடுத்து அவர்களின் சில நண்பர்களுக்குக் கொடுக்க அரசு விரும்புகிறது. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
விவசாயிகளை புறக்கணிக்கிறார்கள் எனும் வார்த்தை என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை வெளிப்படுத்துவதில் பலவீனமானதாக உள்ளது. விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. யாராவது விவசாயிகளை நசுக்கி, வளம் பெறலாம் என எண்ணினால், அவர்கள் நமது வரலாற்றை பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் விவசாயிகள் பலவீனமானார்களோ அப்போதெல்லாம் நாடும் பலவீனமடைந்துள்ளது.
நானும் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். விவசாயிகளை நசுக்கி, ஒருசில வணிக அதிபர்களுக்கு உதவுகிறீர்கள். கொரோனா காலத்தில் சாதாரண மனிதனுக்கு உதவவில்லை. ஆதரவளிக்கவில்லை எனில் நீங்கள் என்ன பிரதமர்? நீங்கள் இந்திய நாட்டு மக்களின் பிரதமரா? 2, 3 தொழிலதிபர்களுக்கான பிரதமரா?
இந்திய நாட்டு எல்லைக்குள் சீனா என்ன செய்கிறது? அதைப் பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை? இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் உள்ள விவகாரத்தில் முற்றிலுமாக அமைதி காப்பது ஏன்? இவைதான் நான் கேட்க விரும்புபவை. நான் விவசாயிகள், அவர்கள் செய்தவை குறித்து பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அவர்களோடு தொடர்ச்சியாக நிற்பேன். இந்த சட்டங்களை திரும்பப்பெற அரசு கட்டாயப்படுத்தப்படும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qjrQYz
via IFTTT
0 Comments