2010 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் செய்த அதே ஃபீல்ட் செட்டப்பை மீண்டும் செய்து பொல்லார்டின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தோனி தூக்கிய விதம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார். ஒருபக்கம் மும்பை வீரர்கள் விக்கெட்டுகளை கடகடவென தாரை வார்க்க, மறுபக்கம் கைமேல் வந்த “லட்டு” கேட்சுகளை தவறவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சென்னை அணி.
முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினர் மும்பையின் ஓப்பனர்கள். இதன் காரணமாக 2 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. அடுத்ததாக சாண்ட்னர் வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்ய தவறினார் தோனி. அதே சாண்ட்னர் வீசிய பந்தில் ப்ரெவிஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டார் கேப்டன் ஜடேஜா.
முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் ப்ரெவிஸ். இதே வேளையில் பிராவோவும் தன் பங்குக்கு ஒரு கேட்சை மிஸ் செய்ய அடுத்ததாக சூர்யகுமார் அடித்த பந்தை ஜடேஜா மிஸ் செய்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து அதிரடி காட்டத் தயாராகிய பொல்லார்டை வீழ்த்த தனது பழைய வியூகம் ஒன்றை வகுத்தார்.
பொல்லார்டை ஆட்டத்தை கணித்து 2010 ஆம் ஆண்டு மும்பையுடனான இறுதிப் போட்டியில் வகுத்த வியூகம் அது. மிட்-ஆஃபில் இருந்த பீல்டரை நடுவருக்குப் பின்னால் நேராக வட்டத்தின் விளிம்பிற்கு நகர்த்திச் சென்று நிற்க வைப்பது தான் அந்த வியூகத்தின் முக்கிய நகர்வு. அன்று சுழற்பந்து வீச்சாளர் அல்பி மோர்கல் பந்துவீச, உயரமான ப்ளேயரான மேத்யூ ஹைடனை நடுவருக்கு பின் வட்டத்திற்கு வெளியே நிறுத்தியிருப்பார் தோனி. அவ்வளவு தான்! பொல்லார்டு தன் வழக்கமான ஷாட் ஆடி, அவுட் ஆகி வெளியேறினார்.
இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா பந்துவீச, உயரமான ஷிவம் துபேவை வட்டத்திற்கு வெளியே நகர்த்தினார். பொல்லார்ட் அடித்த பந்து துபே கையில் சென்று அமர்ந்துவிட்டது. அதே வியூகம்! அதே பேட்ஸ்மேன்! அதே தோனி! கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே இந்த விக்கெட்டை பொல்லார்டின் திமிர்த்தனம் என்று குறிப்பிட்டார். இறுதியில் திலக் வர்மா, உனட்கட்டிம் பொறுப்பான ஆட்டத்தால் 155 ரன்களை 7 விக்கெட்டுகளை இழந்து குவித்தது மும்பை.
தற்போது சென்னை அணியும் தொடக்கத்தில் தடுமாற்றம் அடைந்துள்ளது. 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/xzLfZI8
via IFTTT
0 Comments