ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காகவே வழிப்பறி கொள்ளையராக மாறிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். பறக்கும் ரயில் நிலையங்களில் வயதான பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டபோது ரயில்வே காவல் துறையிடம் அவர் வசமாக சிக்கியுள்ளார்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக வயதான பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது. 5 நகை பறிப்பு சம்பவங்களால் ரயில் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருவான்மியூர், பெருக்குடி, வேளச்சேரி உள்பட பறக்கும் ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வயதான பெண்களிடம் மதிய வேளைகளில் நகைபறிப்பு சம்பவங்கள் அனைத்து நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த நேரங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்படி கண்காணிக்கையில், பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணிடம் அடையாளம் தெரியாத ஒருவன் நகையை பறித்து ஓடியுள்ளர். அந்நபரை தனிப்படை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிந்தது. மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அவர் தான் 5 தங்க நகை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் நடத்திய விசாரணையில், கைதான ஜெயராமன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்துள்ளவர் என்பதும், ஆன்லைன் ரம்மி மீண்டும் மீண்டும் விளையாட பணம் இல்லாததால் ஜெயராமன் பறக்கும் ரயில் நிலையங்களில் வயதான பெண்களை குறிவைத்து தங்க நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. ஒரு நாளைக்கு ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 ஆயிரம் வரை இழந்து வந்ததால் நகைபறித்து அதனை விற்று அந்த பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. வயதான பெண்களிடம் நகை பறித்தால், அவர்களால் தன்னை துரத்தி பிடிக்க முடியாது என்பதாலேயே வயதான பெண்களை குறிவைத்து நகை பறித்ததாக கைதான ஜெயராமன் வாக்குமூலம் அளித்துள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான ஜெயராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையனை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசாரை ரயில்வே காவதுறை கூடுதல் டிஜிபி வனிதா நேரில் அழைத்து சான்றிதழ வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஃப்தார் - மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments