சேலம் ஆத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு தலையை துண்டித்து கொலைசெய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஆத்தூர் அருகேயுள்ள சுந்தரபுரம் பகுதியில் பூ கட்டுவதற்காக நூல்வாங்க சென்ற சிறுமியிடம் தினேஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்ல சிறுமி சென்றபோது சிறுமியை பிடித்து கழுத்தை அறுத்து தலையை துண்டித்து தினேஷ்குமார் கொலைசெய்தார். இந்த வழக்கு தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன.
இதனையடுத்து தினேஷ்குமார் மீது ஆத்தூர் காவல்நிலையத்தில் கொலை, பாலியல் சீண்டல் மற்றும் தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, வழக்கின் விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தினேஷ்குமார் குற்றவாளி என்பது 100% உறுதியானதையடுத்து அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீண்டாமை தடுப்புச்சட்டத்தின்கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments