அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியவர்களை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 15 வயது மகள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த தந்தையின் நெருங்கிய நண்பரான ரமேஷ் என்பவர் இந்த குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் வீட்டு அருகே உள்ள பாலமுருகன் (எ) முருகேசன் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இந்த விஷயத்தை தெரிந்த சிறுமியின் தந்தையின் நெருங்கிய நண்பரான ரமேஷ் என்பவர் இதனை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், பாலமுருகன் (எ) முருகேசன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments