வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி பனோரமா தெருவில் வசித்து வருபவர் பவுன்தாய் (50). இவரது கணவர் ராமராஜ் (60) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு மணிகண்டன் (32), வினோத் (28) ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் படித்து முடித்து விட்டு கடந்த சில ஆண்டுகளாக வெளியூரில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த பவுன்தாய், ஏலச் சீட்டு நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போடி ஜக்கம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு (29) என்பவர், இவரிடம் ஏலச் சீட்டு போட்டு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ தினமான நேற்றிரவு பவுன்தாய், அவரது வீட்டில் தனியாக இருந்தபோது பிரபு அங்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பவுன்தாய் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வெளியே வந்த பிரபுவிடம், அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். அதற்கு ஏதோ சொல்லி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பிறகு வீட்டினுள் சென்று பார்த்தபோது பவுன்தாய் கழுத்தறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின்பு அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போடி டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொலையாளி பிரபு போடி தாலுகா காவல் நிலையத்திற்கு வந்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக பவுன்தாயை தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் வேற ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் பிரபுவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷ
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments