
சீர்காழி அருகே 2 சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான 2400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 சொகுசு கார்களை மடக்கி பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ரகு, கௌதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமார். சோமுராஜ், செல்வராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து நடைபெற்ற போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடலங்குடி பகுதிக்கு மதுபானம் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தொடர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments