
முசிறி அருகே பெண் தலைமை காவலரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
முசிறியை சேர்ந்தவர் எல்லப்பன் (42). இவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைகாட்டி வழியாக சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் எல்லப்பனுக்கும் எதிரில் பைக்கில் வந்த நபருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி காவல்நிலைய பெண் தலைமை காவலர் கவிதா மற்றும் போலீசார், மது போதையில் இருந்த எல்லப்பனிடம் என்ன தகராறு என விசாரித்துள்ளார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த எல்லப்பனின் நண்பரான வழக்கறிஞர் கார்த்திக், பெண் தலைமை காவலர் கவிதாவிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காவலர் கவிதா மீது இருசக்கர வாகனத்தை மோதியதாகவும் தெரிகிறது. இதில், கவிதாவின் காலில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீசார் எல்லப்பன், வழக்கறிஞர் கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments