
தந்தை இறந்ததால் தாயை பாலியல் தொந்தரவுக்கு தனது தாத்தா உள்ளாக்குவதாக சிறுமி ஒருவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
கடலூர் மாவட்டம் T.குமாரபுரம் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்திருந்தார் அப்போது தனது கணவர் கார்த்திகேயன் ஆறு மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் தற்போது எந்தவிதமான வருமானமும் இல்லாமல் உணவுக்காகவும் வாழ்க்கைக்காகவும் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தனது கணவரின் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருகிறார் அவர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பாலியல் புகாருக்கு என்ன ஆதாரம் என்று என்னைக் கேட்கிறார்கள் என்று ஆவேசமானார். இதனால் அவமானத்தில் கூனிக்குறுகி உள்ளேன் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.

பாலியல் புகாருக்கு என்ன ஆதாரம் தருவது என்று தெரியவில்லை அவர் பேசிய ஆடியோக்கள் என்னிடம் இருக்கிறது என மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கூட்டத்துக்கு வந்த அவரது மகள் தனது தந்தை இறந்த பிறகு தனது தாத்தா தொடர்ந்து தாய்க்கு பல்வேறு விதமாக பாலியல் தொந்தரவு செய்கிறார் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது எனது தாய்க்கு பாதுகாப்பு தாருங்கள் எனக் கதறினார்.
இது அங்கு இருந்தவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது காவல்துறையில் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு இதில் தலையிடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments