
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரை, ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி புதுக்குடி கிராமத்திற்கு உட்பட்ட பன்னீர்குளம் என்ற குளத்தை மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 40) மற்றும் ஆல்பர்ட் (50) என்ற இரண்டு நபர்களும் சேர்ந்து ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் அதிகாரிகள் கள ஆய்வு செய்து குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட முள்வேலிகளை அகற்றினர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆல்பர்ட் மற்றும் பிரான்சிஸ் முள்வேலியை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் அதிகாரிகளுடன் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனையும், கிராம உதவியாளர் பாலின் ரமேஷையும் ஆக்கிரமிப்பாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் கிராம நிர்வாக அலுவலரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வரும் சூழலில் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது கடையநல்லூர காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments