
ஈரோட்டில் மசாஜ் சென்டர் உரிமையாளர் பெற்ற கடனுக்காக அவரது நண்பரை கடத்திச் சென்ற கேரள இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரளாவை சேர்ந்த இர்பான் - சோனி தம்பதியினர் ஈரோட்டில் தங்கி மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இர்பான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஷெரீப் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஐம்பதாயிரத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்த இர்பான் ,மீதமுள்ள பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து ஷெரீப் தனது நண்பர்களான லிசோய் மற்றும் சௌபிக் ஆகியோருடன் இர்பான் - சோனி தம்பதியினரை தேடியுள்ளார். ஆனால், அவர்கள் கிடைக்காத ஆத்திரத்தில் தம்பதியினருடன் பழக்கத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மெகுபூர்பாட்ஷா-வை காரில் கேரளாவிற்கு கடத்தியதோடு கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழக - கேரள எல்லையான வாளையாரில், கோவை போலீசார் நடத்திய வாகன சோதனையில் லிசோய் மற்றும் சௌபிக் ஆகிய இருவரும் தப்பிச்செல்ல ஷெரீப் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மெகுபூர்பாட்ஷா-வை போலீசார் பிடித்து தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆள்கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஷெரீபை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். படுகாயமடைந்த மெகுபூர்பாட்ஷா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments