வலி நிவாரணி மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து போதைக்காக விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 523 மாத்திரைகள், 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை புழுதிவாக்கம், பாலாஜிநகர், 23வது தெருவில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக டைடால் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பதுக்கி வைத்துள்ளதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 523 டைடால் வலி நிவாரணி மாத்திரைகள், மற்றும் 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை போதைக்காக விற்பனை செய்த புழுதிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார்(25), கண்ணதாசன் நகரை சேர்ந்த மகேஷ்(32) ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், மும்பையில் இருந்து மாத்திரைகளை வாங்கிவந்து போதைக்காக இளைஞர்களிடம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. பின்னர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments