ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை கொலை செய்ததாக இருவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிப்பந்திகாலனி பகுதியில் வசிக்கும் ராஜ் - மாரியம்மாள் தம்பதியினரின் மகன் சேதுராஜ் (18). கூலி வேலை செய்து வந்த இவர், கடந்த 16 ஆம் தேதி வாழக்குளம் கண்மாய் நீரில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து தீயனைப்புத் துறையினர் உதவியுடன் அவரை மீட்ட மம்சாபுரம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சம்பவத்தன்று சேதுராஜ் அவரது நண்பரும் உறவினருமான கார்த்திக்குடன் சேர்ந்து வாழக்குளம் கண்மாய் கரையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற கார்த்திக்கின் சித்தப்பா மகன் கருப்பசாமி மற்றும் வீரமணி ஆகிய இருவரும், `கார்த்திகை குடிக்க வைத்து பாழாக்குவது நீதான்’ என்று சேதுராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறபடுகிறது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், கருப்பசாமி, வீரமணி இருவரும் சேர்ந்து சேதுராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை கண்மாய் நீரில் தூக்கி எரிந்து விட்டு எதுவும் தெரியாதது போல் ஊருக்குள் வந்து விட்டனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இளைஞரும், கொலை செய்தவர்களும் உறவினர் என்பதால் வெளியே தெரியாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நாடகமாடியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கருப்பசாமி, வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்த மம்சாபுரம் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments