குற்ற நிகழ்வுகளின் கூடாரமாகவும், புகலிடமாகவும் தலைநகர் டெல்லி மாறிக் கொண்டிருக்கிறதா என்ற அச்சம் அங்கு நித்தமும் நிலவும் கொடூர சம்பங்கள் மக்களை எண்ண வைத்து வருகிறது.
2023-ன் புத்தாண்டு நாளின் தொடக்கத்தில், டெல்லியில் காருக்கு அடியே சிக்கிய அஞ்சலி சிங் என்ற இளம்பெண் பல கிலோமீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களால் உயிரிழந்ததிருந்தார். மேலும் அவரது உடலும் நிர்வாணமாக சாலையில் கிடந்தது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நடந்த இக்கொடூர சம்பவம், நாட்டையே அதிர வைத்தது.
தொடர்புடைய செய்தி: டெல்லி: கார் டயரில் சிக்கி, சுமார் 12 கி.மீ-க்கு சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்
சம்பவத்தின்படி புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த சிலர், அஞ்சலி சிங் மற்றும் அவரது தோழி சென்ற ஸ்கூட்டரில் மோதியிருக்கின்றனர். இதில் காரின் சக்கரத்தில் சிக்கிய அஞ்சலி கிட்டத்தட்ட 12 - 13 கி.மீ தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல், அசுதோஷ் மற்றும் அங்குஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையின் போது காரில் சத்தமாக பாட்டு போட்டு கேட்டதால் சக்கரத்தில் அஞ்சலி சிங் சிக்கியது தெரியவில்லை என்றவர்கள் தற்போது அதிர்ச்சியளிக்கும் வேறொரு வாக்குமூலத்தை கொடுத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்தி: 12 கி.மீ.க்கு காருக்கு அடியே சிக்கிய டெல்லி இளம்பெண் வழக்கு: அம்பலமான போலி வாக்குமூலம்!
அதாவது, காருக்கு அடியில் முதலில் அஞ்சலி சிங் சிக்கிய போதே தங்களுக்கு தெரியும் என்றும், இறங்கி காப்பாற்றினால் எங்கே கொலை வழக்கில் சிக்கிக்கொள்வோமோ என்ற பயத்தினாலேயே அவர்கள் காரை நிறுத்தாமல் ஓட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்களாம். இந்த சம்பவத்தின் போது காரில் இருந்தவர்கள் போதையிலும் இருந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
அஞ்சலி சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, அவரது உடலில் 40 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவரது விலா எலும்பு முதுகில் இருந்து வெளியேவே வந்துவிட்டது என்றும், முதுகுத்தண்டு, கீழ் மூட்டு மற்றும் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் சொல்ல முடியாத அளவுக்கு காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுடன் அஞ்சலி சிங்கின் உடல் நிர்வாணமாக இருந்ததாக கூறப்பட்டதால் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.
முன்னதாக, அஞ்சலி சிங்கின் மறைவால் அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் பெரும் இன்னலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி சிங்கின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments