இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமடைந்த தாய் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் அருகே உள்ள உஸ்மானாபாத்தில் வசித்துவரும் 25 வயதான பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அந்த பெண் இரண்டவதாக கர்ப்பமானாதை அடுத்து, தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவ வலி எடுத்து அந்தப் பெண் காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவருக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்தப் பெண் கடும் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து அந்தப் பெண் பிறந்து 3 நாட்களேயான தனது குழந்தையை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கொலை செய்ததை மறைத்து குழந்தை திடீரென இறந்துவிட்டதாக அந்தப் பெண் கூறிய நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் தொடர் விசாரணை செய்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments