கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத்தில் மாதம் ரூ 2.5 கோடி வாடகையிலான சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த மாதம் சவூதி அரேபியாவின் கால்பந்து கிளப்பான அல்-நாஸ்ர் கிளப்பில், ஒரு வருடத்திற்கு ரூ.1770 கோடி என்ற இதுவரை எந்த ஒரு வீரருக்கும் செய்யப்படாத சாதனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் ப்ரோ கால்பந்து தொடரான, ரோஸ்ன் சவுதி லீக் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில், அல்-நாஸ்ர் அணியில் இடம்பெற்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கிறார் ரொனால்டோ. ரியாத்தில் நடைபெறும் இந்த தொடரில் பங்குபெற ரியாத்திற்கு பயணித்திருக்கும் ரொனால்டோ, தனது கால்பந்து குழு மற்றும் குடும்பத்துடன் ஒரு சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அங்கு அல்நாஸ்ர் கிளப்பில் இணைவதற்காக ரொனால்டோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தங்கியிருக்கும் சொகுசு கட்டிடம் குறித்தும், அதற்கு அவர் வாடகையாக செலுத்தும் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ரியாத்தில் உள்ள மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான கிங்டம் டவரில், ரொனால்டோ தங்கியிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
கிங்டம் டவரில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் ரொனால்டோ தங்கியிருப்பதாகவும், அவர் அங்கு 17 அறைகளை தனக்கும், தனது கால்பந்து குழுவினருக்கும் புக் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர்களுடைய தங்கும் அறைகளுக்கு மட்டும் மாத வாடகை ரூ.2.5 கோடி என்று சொல்லப்படுகிறது.
மேலும் கெஸ்ட்டாக தங்கியிருக்கும் நட்சத்திர வீரருக்கு தொந்தரவு இல்லாத வகையில், ஹோட்டல் ஊழியர்கள் யாரும் அவருடன் செல்ஃபி எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ரொனால்டோ மற்றும் அவரது குழுவினருக்கு, சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உலகின் சிறந்த உணவுகள் வழங்கப்படுகின்றனவாம். அவருடைய சொகுசு கட்டிடத்தில் இன்-ரூம் சர்வீஸும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரோஸ்ன் சவுதி லீக் தொடரில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல்-தாய் மற்றும் அல் நாஸ்ர் அணிகளுக்கிடையேயான போட்டியில், ரொனால்டோ தனது முதல் போட்டியாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரொனால்டோ களமிறங்காமலேயே அந்த போட்டி நடைபெற்றது, போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது அல்-நாஸ்ர் அணி.
வெற்றிக்கு பிறகு, அல்-நாஸ்ர் சவுதி லீக் புள்ளிபட்டியலில் 29 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் ரொனால்டோ தனது முதல் போட்டியை விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/zorHaL3
via IFTTT
0 Comments