கொடைக்கானலில் விவசாயி ஒருவரிடம் பட்டா மாறுதல் செய்ய 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது தாயார் பெயரில் இருந்த நிலத்தை அவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் என்பவர் ராஜகோபாலிடம் பட்டா மாறுதல் செய்ய ரூபாய் 5000 கையூட்டு கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் ராஜகோபால் புகார் செய்துள்ளார். புகார் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ரூபாய் நோட்டுகளை சுவாமிநாதனிடம், ராஜகோபால் கையூட்டாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து, அவர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவரிடம் முறையான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் பெற்றவுடன் சிறையில் அடைக்கப்படுவார் என லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments