ஆட்சியில் இருப்பவர்களின் மெத்தனப்போக்கின் காரணமாகவே தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் மழை நீர் தேக்கம் அடைந்துள்ளது என கனிமொழி எம்.பி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதனை தொடர்ந்து வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் மானாவாரி விவசாய பயிர்களான மக்காச்சோளம், உளுந்து ஆகியவை முளைக்க துவங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர், தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர், ஆதிபராசக்தி நகர், கேடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத நிலை உள்ளது. இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் சுமார் 200 மோட்டார் பம்புகளை இயக்கியும், லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் இப்பகுதிகளில் தண்ணீர் வடிந்தபாடில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். மேலும் மழைநீரை அகற்ற ஏதுவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தனியார் ஆலைகளை தொடர்பு கொண்டும் தெரிவித்தார். சாக்கடை கலந்த மழை வெள்ளத்தில் இறங்கி பார்வையிட்ட கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்...
மாநகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீரோடைகள், தடுப்பணை போன்று உயரமாக உள்ளதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது திட்டமிடாமல் அமைக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இதற்கு நிரந்தர தீர்வு தேவை இல்லையென்றால் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் ஆட்சி மாற்றம் வரும் திமுக ஆட்சியில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்ற அவர், மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதற்கு ஆட்சியில் இருப்பவர்களின் மெத்தனப் போக்கே காரணம் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/38ONheg
via IFTTT
0 Comments