
மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார், 35 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கடந்த 17 ஆம் தேதி சென்னை வேளச்சேரி மருதுபாண்டி சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்த அருணாதேவி (59) என்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இருவர் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அருணா தேவி கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் சந்திர மோகன் தலைமையில், உதவி ஆய்வாளர் அருண், தலைமை காவலர் தாமோதரன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைவேலி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விரட்டிச் சென்ற போலீசார், அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த சகோதரர்கள் ஹக்கீம் (24), ஜான்பாஷா (31), மற்றும் இவர்களது கூட்டாளிகளான நீலாங்கரையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22), கண்ணகி நகரைச் சேர்ந்த விஜயகுமார் (30), என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது பழவந்தாங்கல், பல்லாவரம், மடிப்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜான்பாஷா மீதி ஒரு கொலை வழக்கு உட்பட 18 குற்ற வழக்குகளும், ஹக்கீம் மீது 5 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 35 சவரன் தங்க நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments