நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகக்கூறி பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் வரை பணம் பறித்துள்ளது ஒரு மோசடி கும்பல்.
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாகக் கூறி ஒருவர் போன் செய்துள்ளார். அந்நபர் அந்த பெண்ணிடம், நீங்கள் வெளிநாட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பி உள்ளீர்கள். அந்த பார்சலில் 2 பாஸ்போர்ட்கள், 5 ஏடிஎம் கார்டுகள், 300 கிராம் போதைப்பொருள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவை உள்ளது. போதைப்பொருள் இருந்ததால் அந்த பார்சலை நாங்கள் நிராகரித்து விட்டோம். இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப் போகிறோம்'' என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிராச்சி தோக், தான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் கூரியர் நிறுவன ஊழியராகக் காட்டிக்கொண்டு பேசிய நபர் அப்பெண்ணிடம், நீங்கள் அந்த பார்சலை அனுப்பவில்லை என்றால், உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்தி அனுப்பியிருக்கக் கூடும் என்றும் இந்த விவகாரத்தில் உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று நிரூபிக்க தாம் உதவத் தயாராக இருப்பதாகவும், போலீசில் உங்களுக்கு சாதகமாக பேசித் தருவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அவரின் பேச்சை பிராச்சி தோக் நம்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மும்பை போலீஸில் இருந்து பேசுவதாக அப்பெண்ணின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் விசாரிப்பதுபோல் நடித்துவிட்டு போனை வைத்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் அந்த பெண்ணிடம் தொடர்புகொண்ட முதலில் அந்த நபர், இப்பிரச்சினையை தீர்க்க ரிசர்வ் வங்கிக்கு ரூ.95,499 கட்ட வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு பேச வேண்டும் இங்கு பேச வேண்டும் என்று பல காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் நான்கு பரிவர்த்தனைகளில் மொத்தம் 6,93,437 பணம் பெற்றுள்ளனர்.
அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிராச்சி தோக் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments