சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் போலீசார் அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு மற்றும் பைக் திருட்டு, கஞ்சா பொட்டலங்கள் விற்பனை, கள்ள சந்தையில் மது மற்றும் குட்கா விற்பனை அதிகரித்து வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அது மட்டுமில்லாமல் குற்றச் செயல்களில் ஈடுப்படுவோர் கோயம்பேடு மார்கெட் பகுதிகளில் தஞ்சம் அடைந்து விடுவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதனை தடுக்கும் பொருட்டு கோயம்பேடு போலீசார் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலை வேளையில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், மொட்டை மாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள், கூலி தொழிலாளர்களாக இல்லாதவர்கள் தங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தொடர்ந்து கோயம்பேடு மார்கெட் பகுதிகளில் கூட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8ம் தேதி கோயம்பேடு போலீசார், கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கஞ்சா, குட்கா விற்பனை செய்தவர்கள், பைக் திருடர்கள் என்று 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments