முற்றிய வாக்குவாதம்... இளைஞரை காரின் முன்பக்கம் வைத்து இழுத்து சென்ற பெண்! பரபரப்பு வீடியோ

LATEST NEWS

500/recent/ticker-posts

முற்றிய வாக்குவாதம்... இளைஞரை காரின் முன்பக்கம் வைத்து இழுத்து சென்ற பெண்! பரபரப்பு வீடியோ

பட்டப்பகலில் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் 71 வயது முதியவரை ஒருவர் இழுத்துச்சென்ற கொடூரம் நடந்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது பெண்ணொருவர் பெங்களூரு சாலையில் தன் காரின் முன்புறம் 29 வயது மதிக்கத்தக்க ஒருவரை சுமார் 3 – 4 கி.மீ.க்கு இழுத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. பலர் தடுக்க முயன்றும் அப்பெண் நிறுத்தாமல் சென்றுள்ளது, சாலையில் சென்றோர் எடுத்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது.

பெங்களூருவில் ஞானபாரதியை சேர்ந்த உலால் மெயின் ரோடு பகுதியில் நடந்த சம்பவத்தின்படி, பெண்ணொருவர் காரில் 29 வயதான ஒரு ஆணை தன் காரின் முன்பகுதியில் வைத்து இழுத்துச்சென்றிருக்கிறார். இழுத்துச் செல்லப்பட்ட நபரான தர்ஷனும் (29) காரில்தான் வந்திருக்கிறார். அவருடைய கார் இவருடைய கார் மீது நேருக்கு நேர் மோதியதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் தர்ஷன்தான் தவறான திசையில் வாகனத்தை இயக்கியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இரு கார்களும் மோதியதில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

image

ஒருகட்டத்தில் அப்பெண் அங்கிருந்து கிளம்ப முற்படவே, தர்ஷன் அப்பெண்ணின் காரின் முன்பகுதியை மறித்து அவரை தடுத்துள்ளார். இருப்பினும் அப்பெண் காரை இயக்கியுள்ளார். இதில் தர்ஷன் காரின் முன்புற கண்ணாடியை கெட்டியாக பிடித்துக்கொள்ளவே, அப்படியே இழுத்துச்செல்லப்பட்டிருக்கிறார்.

கண்ணாடியை பிடித்தபடி பேலன்ஸ் இன்றி தர்ஷன் இருந்ததை கண்ட அங்கிருந்த வாகன ஓட்டிகள், அப்பெண்ணை விரட்டி பிடித்து நிறுத்தியுள்ளனர். தர்ஷன் கூறும் தகவல்களின்படி, அப்பெண் தன்னிடம் நடுவிரலை காண்பித்து ஆபாசமான வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அப்பெண்ணை மகளிர் இல்லத்திலும் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்களையும் காவல்துறை கஸ்டடியிலும் எடுத்துள்ளனர்.

 image

அப்பெண்மீது கொலை முயற்சியின்கீழ் வழக்கு பதியப்பட்டும், தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் (யஷ்வந்த் மற்றும் வினய்) மீது பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்வது, ஒரு பெண்ணின் அடக்கத்தை சீற்றம் செய்யும் நோக்கில் அவரை தாக்குவது ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் காரில் அவரது கணவர் மற்றும் அவர்களின் நண்பர் பயணித்துள்ளனர் என சொல்லப்படுகிறது. அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை. இரு தரப்பில் தர்ஷன் தான் முதலில் வழக்கு பதிந்திருக்கிறார். பின்னர் அப்பெண்ணின் கணவர், அப்பெண்ணுக்காக வழக்கு பதிந்திருக்கிறார்.

தர்ஷன் தனது புகாரில், “அன்று காலை 10.15 மணியளவில், நான் என் கடைக்கு (இவர் ஐஸ்க்ரீம் மற்றும் செல்லப்பிராணிகள் பராமரிப்புக்கான கடைகள் வைத்துள்ளார்) சென்றுகொண்டிருந்தேன். அப்போது உலால் ஜங்க்‌ஷன் சிக்னல் அருகே செல்கையில், அப்பெண்ணின் கார் வழிமறித்தது. அதில் அவருடன் அவரது கணவரும் இருந்தார். வாகனம் ஓட்டியதில், அவர்கள்மீதுதான் தவறிருந்தது. அதற்காக அவரை எங்களிடம் மன்னிப்பு கூற கோரினேன். விளக்கமளிக்குமாறு கூறினேன். ஆனால் அவர் நிராகரித்துவிட்டார். இதற்குள் சம்பவ இடத்துக்கு என் தம்பியும், என் நண்பரும் வந்தனர். அதேபோல அவர்களின் நண்பரென்றும் ஒருவர் வந்திருந்தார். அந்நபர், என்னை முகத்தில் குத்தி காயப்படுத்தினார். அப்போதுதான் அங்கு காவல்துறையினர் வந்தனர்.

image

காவல்துறையினர், எங்களை காவல்நிலையத்துக்கு வரச்சொன்னார்கள். அப்போது அப்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அதனால் நான் அவரை தடுக்க முயன்றேன். அதற்காகதான் அவர் காரின் முன்புறம் அமர்ந்தேன். ஆனால் அப்பெண் காரை இயக்க ஆரம்பித்துவிட்டார். காரை நிறுத்தும்படி கெஞ்சினேன். நான் விழுந்துவிடுவேன், இறந்துவிடுவேன் எனக்கூறினேன். ஆனால் சுமார் 3 முதல் 4 கி.மீ.க்கு என்னை இழுத்துச்சென்ற பிறகு, அவர் காரை நிறுத்தினார்” என்றுள்ளார்.

அப்பெண் தரப்பில் அவரது கணவர் கொடுத்த புகாரில், “அந்த இடத்தில் பயங்கரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்யவே என் மனைவி அங்கிருந்து காரை எடுத்தார். ஆனால் எதிரில் வந்த அந்நபர் என் மனைவியை தாக்கி பேசினார். அதனால்தான் அவர் கைகளை காண்பித்தார். நான் தான் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு ஃபோன் செய்து அழைத்தேன். இரண்டு காவலர்கள் வந்தனர். அப்போது என் மனைவி காரை எடுத்தபோது, அந்நபர் வண்டியின் முன்புறம் அமர்ந்துக்கொண்டு மிரட்டத்தொடங்கினார். வண்டியை நிறுத்தியபின்னர், என் மனைவியின் ஆடையை கிழித்து அத்துமீறினர். காரின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்துவிட்டனர்” என்றுள்ளார்.

இவ்வழக்கில் யார் மீது தவறென்பது தற்போதுவரை உறுதியாக தெரியவில்லை. இருதரப்பிலும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தை வீடியோ எடுத்த தர்ஷணின் நண்பர்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments