கொடைக்கானலில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு முயல்தல் வழக்கில் இரண்டே நாள்களில் தீர்ப்பளித்துள்ளது அங்குள்ள ஒரு நீதிமன்றம். அதன்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான பெண்ணொருவர் கொடைக்கானலின் கூகல் என்ற கிராமத்தில் இரண்டு ஆண்களால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கடந்த பிப்ரவரி 4-ம் தேதி புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் அவர், தான் கொடைக்கானலில் இருந்து கூகலுக்கு தனது எஸ்.யூ.வி.யில் சென்று கொண்டிருந்த போது இரவு சுமார் 7 மணியளவில் லிப்ட் கேட்பதுபோல தனது வண்டியை இருவர் நிறுத்தியதாகவும், வண்டியில் அவர்களால் தான் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின் வழிப்போக்கர்களால் மீட்கப்பட்ட அப்பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்கீழ் கொடைக்கானலை சேர்ந்த ஜீவா (22) மற்றும் பாலமுருகன் ஆகியோர் விரைந்து கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மீது நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்னிலையில் சார்ஜ்ஷீட் பதியப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை பிப்ரவரி 10 மற்று 13 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் சட்டப்பிரிவு 323 (வலுக்கட்டாயப்படுத்துதல், துன்புறுத்தல்), 354 (A) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் பெண்கள் துன்புறுத்துப்படுத்துவதை தடுக்கும் தமிழ்நாடு சட்டப்பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் இந்த தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் தங்கள் பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக கூறி அப்பெண்ணிடம் லிஃப்ட் கேட்டுள்ளனர். லிஃப்ட் தர அப்பெண் மறுத்ததாகவும், அதனால் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டு, அத்துமீறியதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவையாவும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதித்துறை மாஜிஸ்திரேட் கார்த்திக், குற்றவாளைகளுக்கு 7 வருட சிறை தண்டனை விதித்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு தலா ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து அரசின் உதவி வழக்கறிஞர் சி. குமரேசன் என்பவர் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேசுகையில், "இது நிச்சயமாக தமிழ்நாட்டிலேயே வேகமான நடத்தப்பட்ட வழக்காக இருக்கும். நாட்டிலேயே நடத்தப்பட்ட வேகமான வழக்கு விசாரணையாக கூட இருக்கலாம்" என்றுள்ளார். இப்படியாக இந்த வழக்கு தொடரப்பட்டு எட்டே நாள்களில் முடித்துவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பீகாரில் 8 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, போக்சோவின் கீழ் ஒரே நாளில் தண்டனை வழங்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments