வேதாரண்யம் அருகே வங்கியில் பணம் எடுத்து வரும் நபர்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தம்பதி உள்பட 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் ஒரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதியில் வங்கியில் பணம் எடுத்துவரும் நபர்களை குறிவைத்து இந்த கும்பல் கடந்த மூன்று வாரங்களில் ஐந்து நபர்களிடமிருந்து ரூ.4.5 லட்சத்திற்கு மேல் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்
இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வங்கிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் வங்கிகளிலும் சாலையிலும் நடமாடிய நபர்களை தனிப்படை காவல்துறையினர் தேடிவந்தனர்
இந்த நிலையில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், வேட்டைக்காரனிருப்பு தலைஞாயிறு, கரியாப்பட்டினம் ஆகிய பகுதியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கும்பல் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து திருச்சி திருவெறுப்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், இவருடைய மனைவி காயத்ரி மற்றும் கணேசன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3.5 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments